Thursday, April 7, 2011

கடிதம்

மழை பெண்ணே !
நான் உன் தலை கோத
நினைக்கும்
நேரமெல்லாம்
என் தலை நனைத்து
போகிறாய்...

நான் உன்
வாசம்
நுகர நினைக்கும்
போதெல்லாம்
என் நாசிகளில்
நுழைகிறாய்...

உன் ஸ்பரிசம்
வேண்டும்
போதெல்லாம்
உன் மார்பினில்
அணைக்கிறாய்...

வார்த்திருக்கிறேன்
என் காதலை
உன்
முக வார்ப்படமாய் ....

துயருறும்
போதினில்
என்னுயிராய்
நிறைகிறாய்...

எச்சில் சுவாசமும்
நெஞ்சில் நேசமுமாய்
உனை
அழைக்கிறேன்....

இன்றில்லை எனினும்
என்றாவது
ஒருநாள்
என் சுவாசம்
உனை நிறைக்கும் ...
உன்னிலிருந்து
உன் சுவாசம்
விலகும் போது..

நம்பிக்கையுடனும்
காதலுடனும்
உன்
செல்லகுட்டி.

Wednesday, April 6, 2011

கடிதம்

உன் நினைவுகள் நெருக்கியடித்த அந்த
நெருஞ்சி முள் தருணங்களிலும்
உன் நினைவோடு ஒன்றியிருக்க
முயற்சி செய்கிறேன்

கிளை காதலாய் நின்று விடாமல்
என்னுள்
துளைத்து சென்ற துப்பாக்கி தோட்டவாகி விட்டாய்
ரணம் உன்னுடயதாக்கி
வலியையும் வேதனையையும்
என்னுடயதாக்கி விட்டாய்

ஆழ பரவும் ஆல விருட்சமாக்கி விட்டு
பாதியில் பிடுங்கி எறிய சொல்கிறாய்
வேடமணிந்த மனிதர்கள் மத்தியில்
என் வேடம் களைய செய்தாய்

தோழியுடன் கதைத்த
கடைசி தருணங்களிலும்
உன்னை பற்றிய வார்த்தைகளே
மிகுதியாக விழுந்தன

இறுதியாக அவள் கதைத்த வார்த்தைகளே
இறுதியாகி விடுமோ என
வினவுகிறேன்
கருந்தேளின் கடும்விஷம்
தீண்டியதை போல
உணர்வெனக்கு....

நான் உனக்கு வினவும்
வினா ஒன்றே !!

இயலாமை ஈன்றெடுத்த
இறுதி குழந்தையா நீ ..
உனக்கான கனவுகளை உன்னுள்ளே
புதைத்து
சாகாவரம் பெற்ற கல்லறையாக போகின்றாயா.!

முடிவொன்று சொல்கிறேன் என்று
முற்று புள்ளியை காற்புள்ளியாக்கி
தொடர செய போகிறாயா அல்லது
முழுபுள்ளியிட்டு
முடிவொன்று தர போகிறாயா .!

எதுவாகினும் கதைத்து விடு
காத்திருக்கிறேன் .......

பின்பனிவிழும் மார்கழி மாத இரவில்
உன்னுடன் கதைத்ததெல்லாம்
கதையென எண்ணவில்லை
சாரல் மழை விழும் நவம்பர்
மாத சாலையில் நடந்து சென்றதெல்லாம்
நனவாக வேண்டுமென்றே
விரும்புகிறேன் .!!

என் காதல் காவியமா
அல்ல வழக்கம்போல
காகிதமோ. !

வினாவிற்கு விடைஎழுதி
காத்து இருக்கிறேன்
இலக்கணப்பிழை கண்டுபிடிக்கும்
தமிழாசிரியர் போல
என் மடலை நீ வாசிக்க
நேர்ந்தால் பிழை எனது..

பிழை இருந்தால்
பொருத்தருள்க
பிடிக்குமென்றால்
வரம் அருள்க .